நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
கருமை படர்ந்த கணுக்கால், வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை என பாதங்கள் பலருக்கு பிரச்னையாக இருக்கும். வீட்டிலேயே எளிமையாக பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்...* பாதம், உள்ளங்கால் வறண்டு இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச்சாறை கலந்து தூங்கச் செல்லும்போது நகம், விரல்கள், பாதம் முழுவதும் தடவி, காய்ந்தவுடன் சாக்ஸ் அணிந்து உறங்கவும்.* பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமலும், மினுமினுப்பாகவும் இருக்கும்.* குளிப்பதற்குமுன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெயைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும் மிருதுவாகி விடும்.* வெதுவெதுப்பான நீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் ஷாம்பூ , உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை விட்டு அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து ப்யூமிக் கல்லால் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி நன்றாக துடைத்து விடவும்.* சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து 2 நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால், பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவ, காயத்தால் ஏற்பட்ட தழும்புகள், கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும்.* நான்கு துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக சூடு பறக்க தேய்த்து, 2 பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும்.* மாதம் இருமுறை வெள்ளை எள்ளை அரைத்து, பாதம், நகங்களில் பத்துபோல் போட்டு கழுவவும். இது நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள மண், அழுக்குகளை அகற்றி நல்ல பளபளப்பை கொடுப்பதுடன் வெடிப்பு வராமலும் பாதுகாக்கும்.* காலணிகளையும் சரியான அளவில் போட வேண்டும். தரமானதாகவும் சௌகரியமானதாக வாங்கி அணியும்போது, பாதம் கருத்துப் போகாமல் இயல்பாய் இருக்கும்.
- மகாலெட்சுமி சுப்ரமணியன்,காரைக்கால்