காய்கறி, பழங்கள், இதர பொருட்களை விற்பனை செய்யும் 1 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: சென்னையில் பொதுமக்களின் அன்றாட தேவைகளான காய்கறி, பழங்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் 1 லட்சத்து 124 விற்பனையாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் மார்ச் 17 முதல் தற்போது வரை 1,66,029 நபர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களில் 1,51,641 (91%) நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 11,193 நபர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். செப்டம்பர் 29ம் தேதி வரை 14,13,469 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்த மாநகராட்சி சென்னை மாநகராட்சி ஆகும். சென்னையில் தற்போது வரை 53,495 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் 27.45 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில்தான் அதிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் காய்கறி, பழங்கள் மற்றும் இதரப் பொருட்களை வாங்க அங்காடிகளுக்கு செல்கின்றனர். இவ்விடங்களில் பொதுமக்களுக்கு பிற விற்பனையாளர்களிடமிருந்து தொற்று பரவாமல் தடுப்பதற்காக விற்பனையாளர்களுக்கு சோதனை செய்யப்படுகிறது. இதுவரை 1,00,124 விற்பனையாளர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: