தங்கம் ஓரேநாளில் சவரனுக்கு 624 எகிறியது

சென்னை: தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலை இருந்து வந்தது. கடந்த 25ம் தேதி ஒரு சவரன் 38,312க்கும், 26ம் தேதி 38,240க்கும் விற்கப்பட்டது. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது.  இந்நிலையில் நேற்று காலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை கிடு,கிடுவென உயர்வை சந்தித்தது. அதாவது கிராமுக்கு 76 அதிகரித்து ஒரு கிராம் 4,816க்கும், சவரனுக்கு 608 அதிகரித்து ஒரு சவரன் 38,528க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் விலையை விட மாலையில் கிராமுக்கு 78 அதிகரித்து ஒரு கிராம் 4818க்கும், சவரனுக்கு 624 அதிகரித்து ஒரு சவரன் 38,544க்கும் விற்கப்பட்டது. இது குறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: உலகம் முழுவதும் மக்களிடையே கொரோனா வைரஸ் போய் விட்டதா, இருக்கிறதா? என்ற ஒரு குழப்பமான நிலை நீடித்து வருகிறது. இதனால் யாரும் எந்த விஷயத்திலும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடவில்லை. இதனால், பொருளாதாரம் மேலும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் முதலீட்டாளர்களும் எதில் முதலீடு செய்வது என்று தெரியாமல் ஒரு குழப்பமாக இருக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்னும் 15, 20 நாட்களுக்கு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக நிலை தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: