இரட்டை இலையை பெற லஞ்சம் சுகேஷுக்கு 2 வாரம் இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால  ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக.வில் பிளவு ஏற்பட்டது. அப்போது, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ₹50 கோடி  லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா  உள்ளிட்ட ஒன்பது பேர் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இது பற்றி டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில், டி.டி.வி.தினகரன் தற்போது  ஜாமீனில் உள்ளார்.

ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மீது  பல்வேறு மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க  மறுத்து வந்தது. இதையடுத்து, கீழமை நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல்  செய்த மேல்முறையீட்டு வழக்கையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்துவிட்டது.  இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சுகேஷ்  சந்திரசேகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘எனது மனைவிக்கு புற்றுநோய் உள்ளதால் அவரை  பார்ப்பதற்காக இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்,’ என குறிப்பிடப்பட்டது. நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுகேஷுக்கு 2 வாரங்கள்இடைக்காலம் ஜாமீன் வழங்கினர்.

Related Stories: