ராயுடு இல்லாதது பின்னடைவு தான்...தோனி புலம்பல்

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 லீக் ஆட்டங்களில் 2 தோல்வியை சந்தித்துள்ளது. தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்திய சிஎஸ்கே அடுத்து ராஜஸ்தான் ராயல்சிடம் 16 ரன் வித்தியாசத்திலும், டெல்லி கேப்பிடல்சிடம் 44 ரன் வித்தியாசத்திலும் மண்ணைக் கவ்வியது. சென்னை வீரர்கள், இலக்கை துரத்தும்போது வெற்றிக்கான முனைப்பை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிஎஸ்கே பேட்டிங் குறித்த மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ‘களமிறங்குவதற்கு முன்பாக கொஞ்சம் குளுகோஸ் குடிச்சிட்டு வாங்கப்பா’ என்று சேவக் செய்த ட்வீட்டும் லைக்குகளை அள்ளி வருகிறது. டெல்லி அணிக்கு எதிராக தோற்றது பற்றி தோனி கூறுகையில், ‘இது எங்களுக்கு ஒரு நல்ல போட்டியாக அமையவில்லை.

இரவில் பனிப்பொழிவு இல்லை என்றாலும், ஆடுகளம் சற்று ஸ்லோவாகி விட்டது என்றே நினைக்கிறேன். எங்கள் பேட்டிங்கிலும் போதுமான வேகம் இல்லை. அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தொடக்க ஓவர்களில் கணிசமாக ரன் குவிக்காததால், தேவைப்படும் ரன் ரேட் வெகுவாக அதிகரித்து கடும் நெருக்கடியில் சிக்கி விட்டோம். இதை சமாளிப்பது பற்றி நாங்கள் ஆலோசித்தே தீர வேண்டும். அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்து தெளிவான வியூகத்தை வகுக்க வேண்டியது அவசியம். காயம் காரணமாக ராயுடு இல்லாததும் பின்னடைவை கொடுத்தது. அடுத்த போட்டிக்கு அவர் தயாராகி வருவதால் இந்த பிரச்னை தீர்ந்துவிடும் என நினைக்கிறேன். பந்துவீச்சிலும் முன்னேற்றம் தேவை’ என்றார்.

சென்னை அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் அக். 2ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories: