ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை : முதல்வர் பழனிசாமி!!

சென்னை : ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரஷ்ய நாட்டில் உள்ள வால்கோகிராட் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஆஷிக், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. விக்னேஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மனோஜ் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஸ்டீபன் ஆகிய நான்கு மாணவர்களும் 8.8.2020 அன்று ரஷ்யாவிலுள்ள வோல்கா ஆற்றில் குளித்த போது, எதிர்பாராத விதமாக சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவின் பேரில், தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: