உணவு டெலிவரி ஊழியர் போல் நடித்து கஞ்சா விற்ற இளம்பெண் கைது: பைக், 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆலந்தூர்: உணவு டெலிவரி ஊழியர் போல் நடித்து, மொபட்டில் கஞ்சா கடத்தி விற்பனை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கிண்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் மொபட்டில் கஞ்சா கொண்டுவந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கிண்டி பேருந்து நிலையம் அருகே நேற்று போலீசார் ரோந்து சென்றபோது, இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மொபட்டுடன் நின்றிருந்தார்.அவரிடம் விசாரித்தபோது, பிரபல தனியார் நிறுவனத்தின் உணவு டெலிவரி ஊழியர் என தெரிவித்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது, அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது.  விசாரணையில், அவர் மடிப்பாக்கத்தை சேர்ந்த வனிதா (32) என்பதும், பிரபல தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர் போல் நடித்து, மொபட்டில் கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: