வேலூர்: வேலூரில் இணையத்தளம் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மையங்களை அமைத்து வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், இன்டர்நெட் அழைப்புகள் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக (ஓசிஐயு) காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விசாரணையின் முடிவில், சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூரில் ஓசிஐயு குழுவினர் சோதனையில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் வேலூர் கலாஸ்பாளையம் சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஓசிஐயு டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் நள்ளிரவு 2 மணிக்கு சோதனையை தொடங்கினர். இதனையடுத்து அந்த வீடுகளிலிருந்து கணினி மற்றும் இணையதள கருவிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த வீட்டில் வசித்து வந்த நபர் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அங்கு வசித்த நபர் யார்? என்ற விவரம் தெரியவில்லை என பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து வீட்டு வாடகையை அந்த மர்ம நபர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தியதால், அதுதொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் தீவிரவாத குழுக்கள், தேசவிரோத குழுக்கள் ஆகியவற்றிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகத்திற்கிடமாக உள்ள அந்த நபருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வேலூர் டி.எஸ்.பி பிரவீஸ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.