சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 12ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் மாதத்துக்குள் 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக கல்வி நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான (2020-21) வகுப்புகள் ஆன்-லைனில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் மத்திய, மாநில அரசுகள் அண்மையில் வெளியிட்டிருந்தன.
ஆனால், ஆன்-லைன் வகுப்புகளில் நாள்தோறும் பங்கேற்பதில், கிராமப்புற மாணவர்கள் அனைவரிடத்திலும் மொபைல்ஃபோன் இல்லாதது, நெட்வொர்க் பிரச்சினை உள்ளிட்ட நடைமுறை சிக்கல்கள் நீடித்து வருகிறது. இதனை கருத்தில்கொண்டு, நிகழாண்டு ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், ஆன்-லைன் வகுப்புகளை பயில வசதியாக, அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு பஞ்சாப் மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலில், நவம்பர் மாதத்துக்குள் 12ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க உள்ளோம். முதல் கட்டமாக 50,000 மாணவர்களுக்கு போன்கள் வழங்கப்பட உள்ளன.
இவற்றை அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களில் டச் ஸ்கிரீன், கேமரா, அரசு செயலிகள், 11 மற்றும் 12ம் வகுப்புக்கான இ-பாடங்கள் ஆகியவை இருக்கும். இரண்டாவது கட்டமாக ஸ்மார்ட் போன்கள் அரசால் விரைவில் வாங்கப்பட உள்ளன. நவம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, 12ம் மாணவர்களுக்கு 1.78 லட்சம் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். கொரோனாவால் 2020- 21ம் கல்வியாண்டில் 4 மாதங்கள் ஏற்கெனவே வீணாகி விட்டன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். பெருந்தொற்றுக் காலத்தில் கல்வியை அணுகுவதில் உள்ள சிரமத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.