களக்காடு அருகே ஊருக்குள் உலாவும் கரடியை படம்பிடிக்க செல்போனுடன் சுற்றும் இளைஞர்கள்: கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

களக்காடு: களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தில் உள்ள பொத்தையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 5க்கும் மேற்பட்ட கரடிக் கூட்டம் தஞ்சம் புகுந்துள்ளன. பெரிய அளவில் மரங்களோ உணவோ கிடைக்காத இந்த பொத்தையில் வாழும் கரடிகள், தினமும் ஊருக்குள் புகுந்து சுற்றியுள்ள வயல்வெளிகளில் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த கரடி பல கி.மீ தூரம் ஓடியது. அப்போது விவசாயி ஒருவரையும், வனத்துறை ஊழியரையும் கடித்துக்குதறியது. இந்த கரடியை களக்காடு வனத்துறையினர் மயக்க மருந்து ஊசி செலுத்தி பிடித்து சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.

அதன் பிறகும் கரடிகள் சுற்றுவதாக அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனர். தற்போது விளைநிலங்கள் அறுவடை முடிந்து தரிசுகளாகி வருவதால் கரடிகள் உணவுக்காக பொத்தை அருகே உள்ள சிங்கிகுளம், மலையடி, இந்திராநகர் பெத்தானியா திடியூர் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குள்ளும் செல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர். விவசாயிகள் வயல்வெளிகளில் சுற்றித்திரியும் கரடிகளை மிக அருகில் நின்று செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்புகின்றனர். இந்த போக்கு இளைஞர்களிடையே ஒருவித ஆர்வத்தை தூண்டியுள்ளதால் பலர் செல்போனுடன் மலைப்பகுதியை சுற்றி வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு கரடிகளை கூண்டு வைத்து பிடித்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கொண்டு விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: