ராமேஸ்வரம்: இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் விநாயகமூர்த்தி சகாதேவன் வெற்றி பெற வாழ்த்தி, ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பன் மீனவர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தின் தேர்தலில் மொத்தம் 7,482 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் யாழ்ப்பாணம் பகுதிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் தமிழரான விநாயகமூர்த்தி சகாதேவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்னையில் குறிப்பாக, தமிழக மீனவர்கள் பிரச்னையில் நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.