சத்தியமங்கலம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்வதால் பில்லூர் அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல், கூடலூர் மசினகுடி, முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 25,168 கன அடியாக உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 86.14 அடியாக இருந்த நிலையில் நேற்று மாலை 89.31 அடியாக உயர்ந்துள்ளது. 2 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதால் பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணையில் நீர் இருப்பு 21.1 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.