ஒகேனக்கல் அருகே மீனவரை தாக்கி கொன்ற முதலை: காவிரியில் சுற்றித்திரிவதால் பரபரப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே, மீனவரை தாக்கி கொன்ற முதலை, ஊட்டமலை காவிரியாற்றில் சுற்றி திரிவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு அருகே முசல்மடுவு பகுதியில், கடந்த 3ம் தேதி காவிரியில் மீன்பிடிக்க சென்ற காட்ராஜ் என்பவர், கரையோரம் சடலமாக கிடந்தார். அவரது உடலில் வேறு எந்த காயங்களும் இல்லாத நிலையில், குடல் முழுவதும் வெளியே சரிந்து இருந்தது. எனவே, மீன்பிடிக்க சென்ற போது, ஆற்றில் இருந்த முதலை அவரை கடித்திருக்கலாம் எனவும், அதனிடம் இருந்து அவர் தப்பித்து கரைக்கு வந்த போது, உயிரிழந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மீனவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்ைக விடுத்தனர்.

ஒகேனக்கல் அருகே ஊட்டமலை காவிரியில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் மீன் பிடிப்பது, ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஊட்டமலை காவிரியாற்றில், 10அடி நீளமுள்ள முதலை ஒன்று, பாறை மீது அமர்ந்தபடி இருந்தது. இதை பார்த்த மக்கள் பீதிக்குள்ளாகினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 3ம் தேதி மீன்பிடிக்க சென்ற காட்ராஜ் என்பவரை தாக்கி கொன்ற முதலை, தற்போது ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றித் திரிகிறது. எனவே, மேலும் உயிர்ப்பலிகள் ஏற்படும் முன்பாக, இந்த முதலையை பிடிக்க  வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க ேவண்டும்,’ என்றனர்.

Related Stories: