கொரோனா சிகிச்சைக்கு வந்த முதியவர் மாயம் பூக்கடை போலீஸ் பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மாயமான விவகாரத்தில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் (74) என்பவருக்கு காய்ச்சல் இருந்ததால், ஈக்காட்டுதாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த போது, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சுகாதாரத் துறையினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இடம் இல்லாததால், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த ஆதிகேசவன், மருத்துவமனையிலிருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது மகன் மணிவண்ணன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், காணவில்லை என்ற பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அவரது மற்றொரு மகன் துளசிதாஸ், தனது தந்தையை மீட்டுத்தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம், நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவமனையிலிருந்து ஆதிகேசவன் வெளியேறிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதிகள், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியதும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டியதும் அரசு அதிகாரிகளின் முக்கிய கடமை என தெரிவித்து, ஆதிகேசவனை ஒரு வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

மேலும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து முதியவர் மாயமானாதால், இந்த வழக்கு கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பூங்குழலி ஆஜராகி, வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வழக்கு ஆவணங்களை தங்கள் காவல் நிலையத்திற்கு வரவில்லை என பூக்கடை காவல் நிலையத்தில் கூறுவதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, மாயமான ஆதிகேசவன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், ஆவணங்களை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்ற  சற்று தாமதமாகி விட்டதால், ஒரு வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதை ஏற்று வழக்கை நாளைக்கு தள்ளி வைத்த நீதிபதிகள்,  வழக்கு பதிவு செய்த ஆவணங்கள் வந்து விட்டதா, விசாரணை தொடங்கிவிட்டதா என விளக்கம் அளிக்க பூக்கடை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: