கணவரின் 90வது பிறந்தநாள் விழாவில் மனைவி மரணம்: அண்ணாநகரில் பரிதாபம்

அண்ணாநகர்: கணவரின் 90வது பிறந்த நாளை கொண்டாடிய மனைவி, சமையலறையில் வழுக்கி விழுந்து  பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை அண்ணாநகர், என்.பிளாக் பகுதியை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவரது தந்தை பார்த்தசாரதிக்கு நேற்று முன்தினம் 90வது பிறந்தநாள் என்பதால், தனது வீட்டில் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சி முடித்து உறவினர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில், பார்த்தசாரதியின் மனைவி மணிமேகலை (80), வீட்டின் சமையலறைக்கு சென்றபோது, திடீரென வழுக்கி கீழே விழுந்தார். உறவினர்கள் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிமேகலை இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார், மணிமேகலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  கணவரின் 90வது பிறந்த நாள் விழாவில் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: