சென்னை: இங்கிலாந்து, கத்தார், துபாய், பக்ரைனில் இருந்து 668 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் சிக்கிய 115 பேர், ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானத்தில் மும்பை வழியாக நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தனர். அவர்களில் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு ஒரு பெண்ணும், தனியார் ஓட்டல்களில் 114 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கத்தார் நாட்டின் தோகாவில் இருந்து சிறப்பு விமானம் 204 பேருடன் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அவர்களில் மேலக்கோட்டையூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் 157 பேரும், தனியார் ஓட்டல்களில் 47 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.