ஊரடங்கால் நீதித்துறை நடைமுறையில் மாற்றம் வாட்ஸ்-அப் மூலம் சம்மன் உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: இ-மெயிலுடன் சேர்த்து வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமும் சம்மன், நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே மற்றும் ஆர்.எஸ் ரெட்டி, ஏ.எஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக நேரடியாக சென்று நோட்டீஸ்கள், சம்மன்கள் வழங்குவதில் சிரமம் இருப்பதால் இந்த புதிய நடைமுறை தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் வாட்ஸ்அப் தகவலில் இரண்டு நீல வண்ண டிக் தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர் சம்மனை பெற்றுக்கொண்டதாக கருதப்படும், என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.  

ஆனால் வக்கீல் துஷார் மேத்தா கூறுகையில், வாட்ஸ் அப்பில் நீல வண்ண டிக் தெரியாத வகையில் சுலபமாக செட்டிங்கில் மாற்றம் செய்ய முடியும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர் நோட்டீசை பெற்றுக்கொள்ளவில்லை என தவறுதலாக காட்டமுடியும் என்றார். இதையடுத்து வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பும் போது கூடவே இ-மெயில் மூலமும் நோட்டீஸ் அனுப்பப்படும் என தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்தார்.

Related Stories: