புவனேஸ்வர்: பயற்சிக்கு பணம் தேவைப்படுவதாகக் கூறி தடகள வீராங்கனை டூட்டி சந்த் தனது பிஎம்டபிள்யூ காரை விற்க வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் டூட்டி சந்த் (24). இந்தோனேசியாவில் 2018ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சமூக ஊடகமொன்றில் தனது பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் மாடல் காரை விற்பனை செய்யப்போவதாக அறிவிப்பு ஒன்றை வௌியிட்டார். அந்த காரின் மதிப்பு 30 லட்ச ரூபாய். பயிற்சிக்கான செலவினங்களை சமாளிக்க காரை விற்பதாகவும், அதை பராமரிப்பது சிரமமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். என்ன ஆனதோ அடுத்த சில மணி நேரங்களில் தனது பதிவை டூட்டி சந்த் நீக்கி விட்டார்.