அந்தியூர் அருகே பார்வையற்ற முதியவர் வீட்டில் 24 ஆயிரம் பழைய ரூபாய் நோட்டுகள்: அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

அந்தியூர்: அந்தியூர் அருகே பார்வையற்ற முதியவர் வீட்டில் 24 ஆயிரம் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்கள் இருந்தது. இதை மாற்றித்தர முன்வர வேண்டும் என அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பொதியமூப்பனூரை சேர்ந்தவர் சோமு (58). பார்வையற்றவர். இவரது மனைவி பழனியம்மாள் (49). இருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. கொரோனா காலத்திற்கு முன் கிராமப்புறத்தில் இருந்து நகரத்திற்கு சென்று ஊதுபத்தி, கற்பூரம் போன்றவைகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது அரசு கொடுக்கிற முதியோர் உதவித்தொகையை கொண்டு ஜீவனம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நெசவு கூலித்தொழில் செய்து மனைவி பழனியம்மாள் ஈட்டும் பணத்தை கொண்டும், அரசின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்றும் சம்பாதித்த தொகையினை எதிர்கால தேவைக்காக சிறிது சிறிதாக தனது தாயார் இடத்தில் கொடுத்து சேமித்து வந்துள்ளார். தாயாருக்கு வயது முதிர்ச்சியால் அரசு அறிவித்த 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது அவருக்கு தெரியவில்லை. சோமு மற்றும் அவரது மனைவி பழனியம்மாளும் தாங்கள் கொடுத்து வைத்த பணத்தை அவரிடம் கேட்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் வீட்டில் ஏதோ ஒரு பொருளை தேடும்போது சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 9ம், 500 ரூபாய் நோட்டுகள் 30ம் என மொத்தம் ரூ.24 ஆயிரம் பழைய செல்லாத நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை வங்கிக்கு கொண்டு சென்று கேட்டபொழுது காலக்கெடு முடிந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது மாற்ற இயலாது எனவும் தெரிவித்து விட்டனர். இதனால் தங்கள் எதிர்காலத்திற்கு சிறுகசிறுக சேமித்த தொகை வீணாகி விட்டதே என்ற மனவேதனையில் தம்பதிகள் உள்ளனர். இதனை மாற்றுவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் பயனற்ற பணம் கிடைத்திருப்பது கூடுதல் மனவேதனை அளிப்பதாக பார்வையற்ற சோமு கவலை தெரிவித்தார்.

Related Stories: