தடாலடியாக உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை.. ஒரு சவரன் விலை ரூ.38,000ஐ நெருங்கியது: வாடிக்கையாளர்கள் கதறல்!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. இன்று சவரனுக்கு 528 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை நீடிக்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் நகைக்கடைகள் மூடப்பட்டன. இருப்பினும், விலை மட்டும் உயர்ந்து கொண்டே வந்தது. முதல் ஊரடங்கு மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கும் முன்பாக, முந்தைய நாளில் தமிழகத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ3,952க்கும், சவரன் ரூ31,616க்கும் விற்கப்பட்டது.

அதன் பிறகு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தால், உள்நாட்டு சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்து கொண்டே போனது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,626க்கும், சவரன் ரூ.37,008க்கும் விற்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.4,692க்கும், சவரன் ரூ.37,536க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து  இன்று சவரனுக்கு ரூ5,920 அதிகரித்துள்ளது. அதே போல கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.7656 வரை விலை அதிகரித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ3,735க்கும், சவரன் ரூ29,880க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.54.10-க்கு விற்கப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.54,100 ஆக உள்ளது.

Related Stories: