சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக மாணவர் கொலை.! 5 பேர் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர்லைன், சின்னத்தம்பி தெருவில் முருகன் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 22). இவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார். இவர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் கூறப்படுகிறது. பிரசாந்தின் தாயார் விநாயகி, மீன் வியாபாரம் செய்து வருகிறார். விநாயகியுடன் மீன் வியாபாரம் செய்து வரும் அம்சா, பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தினமும் அதிகாலையில் காசிமேட்டுக்கு மீன் வாங்க ஒன்றாக செல்வது வழக்கம். இதற்காக பிரசாந்த், அம்சாவை அழைத்துவர நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வியாசர்பாடி தேசிங்கநாதபுரத்தை சேர்ந்த பாலச்சந்துரு என்பவர் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரசாந்தை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்துரு உள்ட 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்ட வழக்கில் வியாசர்பாடியைச் சேர்ந்த சந்துரு, பரத், சாக்ரடீஸ், சதாகர், சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: