சென்னை: சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர்லைன், சின்னத்தம்பி தெருவில் முருகன் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 22). இவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்து வந்தார். இவர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் கூறப்படுகிறது. பிரசாந்தின் தாயார் விநாயகி, மீன் வியாபாரம் செய்து வருகிறார். விநாயகியுடன் மீன் வியாபாரம் செய்து வரும் அம்சா, பக்கத்து தெருவில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தினமும் அதிகாலையில் காசிமேட்டுக்கு மீன் வாங்க ஒன்றாக செல்வது வழக்கம். இதற்காக பிரசாந்த், அம்சாவை அழைத்துவர நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வியாசர்பாடி தேசிங்கநாதபுரத்தை சேர்ந்த பாலச்சந்துரு என்பவர் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.