திருச்சி அருகே பயங்கரம் 14 வயது சிறுமி எரித்து கொலை

திருச்சி: திருச்சி மாவட்டம் அல்லித்துறை அடுத்த அதவத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (45). இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். 2வது மகள் கங்காதேவி(14) பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

நெய்தலூர் காலனி ஒத்தக்கடையில் பெரியசாமி ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். மேலும் வீட்டு முன் சிறிய அளவிலான பெட்டிக்கடையும் உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் இயற்கை உபாதைக்காக முள்காடுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் கடையில் இருந்த கங்காதேவியை காணவில்லை.  தாய், அக்கா மற்றும் உறவினர்கள் முள்காட்டுக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணி அங்கு தேடினர். அங்கு மரஅறுவை மில் சுற்றுச்சுவர் அருகே முட்புதரில் வேட்டியால் மூடிய நிலையில் சிறுமி கங்காதேவி  உடலின் முன் பகுதி மட்டும் கருகியபடி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவலறிந்த திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா, எஸ்பி ஜியாவுல்ஹக் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். சிறுமி இறந்து கிடந்த இடத்தில் 1 லிட்டர் கேனில் சிறிது மண்ணெண்ணெய்யுடன் பாட்டில் கிடந்தது. மோப்ப நாய் அங்கிருந்து ஒற்றையடி பாதையில் சென்று சிறிது தூரத்தில் படுத்து கொண்டது. தடவியல் நிபுணர்கள் சோதனையில், சிறுமியின் முகம் மற்றும் நெஞ்சுபகுதி, இடுப்பு ஆகியவை தீயில் கருகி இருந்தது. பின்புறம் சுடிதார் எரியாமல் இருந்தது. உடலை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றபோது, அப்பகுதியினர் கலெக்டர் வந்தால்தான் விடுவோம் என கூறி மதுரை-கரூர் பைபாஸ் சாலையில் மறியல் செய்தனர்.

அவர்களிடம் எஸ்பி ஜியாவுல்ஹக் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திடீரென ஒரு கும்பல் ஆம்புலன்ஸ் கண்ணாடியை பெரிய கல்லை தூக்கி போட்டு உடைத்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி கூறியதை அடுத்து போராட்டத்தை விலக்கி கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பலில் சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் அடங்குவதற்குள் திருச்சியில் சிறுமி எரித்து கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: