கொரோனாவை தொடர்ந்து மீண்டும் ஒரு அச்சுறுத்தல் சீனாவில் புபோனிக் பிளேக் பரவல்: பெரிய எலி, அணிலை தின்றதால் வந்தது ஆபத்து

பீஜிங்: சீனாவின் வுகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. எந்த நாடும் இன்னும் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வரமுடியாமல் சிக்கி திணறி வரும் நிலையில், சீனாவில் பிளேக் நோய் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு நடத்தும் சின்கா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் உட்புற மங்கோலியாவில் இருந்து கடந்த நவம்பரில் வந்த 4 பேர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் நிமோனிக் பிளேக் நோய் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் பதிவாகி உள்ளன.

இவர்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மர்மூட் எனப்படும் பெரிய ரக அணில் அல்லது எலி போன்ற விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டதால் இந்த நோய் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆய்வு அறிக்கைகளை தொடர்ந்து இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சீனாவின் பயன்னூர் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3ம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* நுரையீரலை தாக்கும்

புபோனிக் பிளேக் என்பது பிளேக்கின் ஒரு பொருவான வடிவமாகும். இது மக்களுக்கு எளிதில் பரவக்கூடியது அல்ல. ஆனால், ஒரு சில நேரங்களில் புபோனிக் பிளேக் பாக்டீரியா மனித நுரையீரலை அடையும்போது அது நிமோனிக் பிளேக்காக மாறுகிறது. இதனால், உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

* 24 மணி நேரத்தில் மரணம்

‘கருப்பு மரணம்’ என அனைவராலும் அழைக்கப்படும் புபோனிக் பிளேக் தொற்று மிகவும் ஆபத்தான நோயாகும். இது எலிகள் மூலமாக பரவுகிறது. விலங்குகளிடம் இருந்து பரவும் புபோனிக் பிளேக் நோய், அவற்றை கடிக்கும் சிறு பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக்கூடியது. நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும் எர்சினியா என்ற பாக்டீரியா மூலமாகவும் மனிதர்களுக்கு பரவக்கூடியது. நோய் தாக்கிய உடன் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் 24 மணி நேரத்தில் மரணமடைய நேரிடலாம்.

Related Stories: