முன்விரோத தகராறில் கல்லூரி மாணவன் படுகொலை: தப்பிய 3 பேருக்கு வலை

பெரம்பூர்: முன்விரோத தகராறில் கல்லூரி மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வியாசர்பாடி சின்னத்தம்பி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வினாயகி. இவர்கள் மீன் வியாபாரி. இவர்களது மகன் பிரசாந்த் (22), அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வினாயகியும், பக்கத்து தெருவை சேர்ந்த அம்சா என்பவரும் மீன் வாங்குவதற்கு ஒன்றாக காசிமேடு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மீன் வாங்க செல்வதற்காக அம்சாவை அழைத்து வரும்படி வினாயகி, தனது மகன் பிரசாந்த்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, அவர் பைக்கை எடுத்துக்கொண்டு அம்சாவை அழைத்துவர புறப்பட்டார். சுந்தரம் பவர் லைன் மெயின்ரோடு பகுதியில் சென்றபோது அங்கு மறைந்திருந்த 3 பேர், பிரசாந்த்தை மடக்கி, சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் பிரசாந்த் துடித்துக்கொண்டிருப்பதை பார்த்து, வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரசாந்த்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரசாந்த் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 2017ம் ஆண்டு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. முன்விரோதம் காரணமாக வியாசர்பாடியை சேர்ந்த பாலச்சந்திரன் உள்ளிட்ட 2 பேர், பிரசாந்த்தை வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: