செய்யாறு அருகே பணம் கேட்டு கத்தியால்தாக்கி மாணவனை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து மிரட்டல்: பிளஸ் 2 மாணவன் கைது

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது மகன் அரசு ேமல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவரும், அவரது நண்பர் பிளஸ் 2 மாணவரும் வந்து இவரை பைக்கில் அழைத்து சென்றனர்.  ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்ற அவர்கள், தொழிலாளி மகனிடம், ‘பணம் கொடு’’ எனக்கேட்டு கத்தியால் தாக்கினார்களாம். அவர் பணம் இல்லை என்றதால் நிர்வாணப்படுத்தி சரமாரி தாக்கி, செல்போனில் போட்டோ எடுத்து, பணம் தராவிட்டால் பேஸ்புக்கில் வெளியிடுவோம் என மிரட்டினார்களாம்.

இதனால் பயந்துபோன அவர் லேப்டாப்பை தந்துள்ளார். இது பற்றி வெளியே சொன்னால், உனது குடும்பத்தினரையும் நிர்வாணப்படுத்தி சமூக வலைதளத்தில் பரவ விடுவோம், வீட்டையும் கொளுத்திவிடுவோம் என மிரட்டி சென்றார்களாம். இந்நிலையில் படுகாயமடைந்த தொழிலாளி மகன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்படி அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிந்து பிளஸ் 2 மாணவனை கைது செய்தனர். மேலும், தலைமறைவான மற்றொரு மாணவனை தேடி வருகின்றனர்.

Related Stories: