கன்னியாகுமரியில் நடந்த கொடூரம்; 8 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை...4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது...!

குமரி; கன்னியாகுமரியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 முதியவர்கள் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில்  நாகர்கோவில் பகுதியில் உள்ள கோழிக்கடை ஒன்றில் பணியாற்றும் இவர் தனது மனைவி மற்றும் 8 வயது மகளுடன் தேங்காய்பட்டணம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது 8 வயது மகள், தெருவில்  உள்ள அக்கம் பக்கத்தினரின் வீடுகளுக்கு உதவி கேட்டு செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த சிறுமி தனது தந்தையிடம் தான் செல்லும் வீடுகளில் உள்ள நபர்கள் அவருக்கு உதவி செய்வதோடு  பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து தந்தை இஸ்மாயில் இதுகுறித்து ஊரில் உள்ள முக்கிய நபர் மூலம் தனது மகள் புகார் தெரிவிக்கும் வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த சிறுமி மற்றும்  குடும்பத்தினரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி உதவி கேட்க அக்கம்பக்கத்தினரிடம் செல்லும் போது பணம் கொடுப்பதோடு சிறுமியிடம் பலர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தேங்காய்பட்டணம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் முகமது நூகு (75), ஸ்டுடியோ நடத்தி வரும் சகாய தாசன் (52), ஜாகீர் உசேன் (53), அப்துல் ஜாபர் (66), மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 15 வயதான இரண்டு சிறார் என  ஆறு பேர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து நாகர்கோவில் மகளிர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முதியவர்கள் நால்வரை நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவரையும் நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், 8 வயது சிறுமிக்கு முதியவர்கள்  தொடர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: