புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 சதவீதம் பேருக்கு கூட மருத்துவ காப்பீடு இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலமாக மாறிவிட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மருத்துவக் காப்பீடு தொடர்பான புள்ளி விவரம் நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8,500 பேர், மருத்துவ செலவு கோரி விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி விட்டது. இதன்படி பார்த்தால், 4 சதவீதம் பேருக்கு கூட காப்பீடு இல்லை என தெரிய வந்துள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி சுமார் 6,088 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 100 பேரின் குடும்பத்தினர் மட்டுமே ஆயுள் காப்பீட்டில் இறப்பு பலன் கோரி விண்ணப்பித்துள்ளனர். இது மொத்த இறப்பில் சுமார் 2 சதவீதம்தான்.