கராத்தேவில் கலக்கும் இரட்டையர்கள்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒன்பது வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள். ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன், தங்கையான இவர்கள் சமீபத்தில் உலக சாதனையில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்கள். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதி யைச் சேர்ந்த முருகானந்தம் - பிரியா தம்பதிகளின் குழந்தைகள் இவர்கள். கராத்தே எனும் தற்காப்புக் கலைக்காக சிறு வயதிலேயே இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்கள். இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கெடுத்து இருநூறுக்கும் மேற்பட்ட விருதுகளையும் பட்டயங்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார்கள். சமீபத்தில் உலக சாதனையாளர்கள் பட்டியலில் இவர் களின் பெயரும் இடம் பெற்றிருக்கக் காரணம் சிறுவயதில் சர்வ தேச அளவில் ஏராளமான விருதுகளை வாங்கியதுதான். ‘வில் மெடல் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்’ (Will Medal of World Records) மற்றும் ‘வில் மெடல் கிட்ஸ் ரெகார்ட்ஸ்’ (Will Medal Kids Records ) இந்த இரட்டையர்களை ‘உலக சாதனையாளர்’ என பதிவு செய்து சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

இந்த சாதனைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்’ (Universal Achievers Book of Records) மற்றும் ‘ஃபியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸும்’ (Future Kalam Book of Records)  இவர்களின் சாதனையை உலக சாதனையாக பதிந்திருக்கிறது. இரட்டையர்களை கௌரவித்த நிகழ்ச்சியின்போது ஸ்ரீவிசாகன்- ஸ்ரீஹரிணி ஆகிய இருவரும் குறுகிய நேரத்தில் கண்களைக் கட்டிக்கொண்டு பல்வேறு விதமான தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டி எல்லோரையும் வியக்க வைத்தனர். இவர்கள் நிகழ்த்திக் காட்டிய தற்காப்புக் கலை இதுவரை யாரும் நிகழ்த்தாத புது விதமான தற்காப்புக் கலையாக இருந்ததால் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த இரட்டையர்களின் குரு வி.ஆர்.எஸ். குமார் கடந்த இருபத்தைந்து வருடமாக ஏராளமான மாணவ, மாணவிகளை கராத்தே வீரர்களாக உருவாக்கி இருக்கிறார். அந்த  நிகழ்ச்சியில் இவருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

தொகுப்பு: ஆதித்யா கனிமொழி

Related Stories: