எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 4 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னை : எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 4 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் 0.7 சதவீதத்தினர் மட்டும் மரணம் அடைகின்றனர். குறிப்பாக ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சீறுநீரகம் தொடர்பான நோய்கள் உள்ளிட்டவர்கள் மட்டும் மரணமடைகின்றனர். இதன் அடிப்படையில் இந்த நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டது. இதைப்போன்று எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்பட்டனர்.

இதன்படி 92 சதவீத எச்ஐவி நோயாளிகளுக்கு 3 மாதத்திற்கான கூட்டு மருந்து முன்னதாகவே வழங்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது. தற்போது வரை எச்ஐவி தொற்றுள்ள 5 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories: