கடந்த ஒரு வாரத்தில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் ‘உலா’ வந்த 33 ஆயிரம் பேர் கைது: தமிழகத்தில் 24 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறி தொற்று நோய் பரப்பும் வகையில் சுற்றி திரிந்ததாக கடந்த 7 நாட்களில் மொத்தம் 33 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 23 ஆயிரத்து 691 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் மக்கள் பொருட்கள் வாங்க செல்வதாக கூறி பல இடங்களில் பைக் மற்றும் கார்களில் ஊர் எப்படி இருக்கிறது என்பதை சும்மா ஜாலியாக சுற்றி பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் நேற்று மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றியதாக 9 ஆயிரத்து 260 வழக்குகள் பதிவு செய்து 10 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 562 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 74 ஆயிரத்து 800 பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 7வது நாளான நேற்று வரை தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 897 வழக்குகள் பதிவு செய்து 33 ஆயிரத்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல் அவர்களிடம் இருந்து 23 ஆயிரத்து 691 வாகனங்கள் நேற்று வரை பறிமுதல் செய்து அபராதமாக ரூ. 13 லட்சத்து 99 ஆயிரத்து 800 பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: