அரசின் அறியாமையா?; நிர்வாகத் திறமையின்மையா?: கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.5 லட்சம் கோடி நிவாரணம் தேவை...ப.சிதம்பரம் டுவிட்

சென்னை: உலக மக்களை கொரோனா வைரஸ் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் இவ்வேளையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, இந்தியா முழுவதும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 979  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொரோனா  நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு செய்தார். இதனை தொடர்ந்து, டாடா  அறக்கட்டளை, பாலிவுட் நடிகர்,கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ரூ.5 லட்சம் கோடி நிவாரண உதவி தேவை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும், கொரோனா பாதிப்பை விட ஏழைகளின் வாழ்வாதார பாதிப்பு மிகப்பெரிய பேரிழிவை ஏற்படுத்தும் என்றும் கண் எதிரே பெருந்துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, பிரதமரும் மத்திய நிதியமைச்சரும் எதற்காக காத்திருக்கின்றனர்.  பசியால் வாடும் குழந்தைகளையும் இடம்பெயர்ந்த கதியற்ற தொழிலாளர்களையும் டி.வி.க்கள் காட்டுகின்றன.

பணத்தை உருவாக்கும் (அச்சிடும்) ஒரே சலுகையும் உரிமையும் மத்திய அரசுக்கு உண்டு. மாநில அரசுகள் அவ்வாறு செய்யவில்லை. அதிக பணம் தேவைப்படுவதால், பணத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். பொருளாதார ஆலோசனைக்  குழு 24 மணி நேரத்தில் ஏழைகளுக்கு பணத்தை சென்றடைய வளங்களையும் வழிமுறைகளையும் கண்டறிய ஒரு திட்டத்தை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

 இதற்குக் காரணம் அரசின் அறியாமையா? அரசுக்குச் சொல்லப்படும் தவறான யோசனைகளா? நிர்வாகத் திறமையின்மையா? ரூ 5 லட்சம் கோடி தேவைப்படும் சூழ்நிலையில் ரூ 1 லட்சம் கோடி மட்டும் ஒதுக்கிய அரசைப் பற்றி என்ன  சொல்வது? தொலைக்காட்சியில் பார்க்கும் பசியில் வாடும் குழந்தைகளையும் தம் கிராமங்களை நோக்கி நடந்தே போகும் வேலையில்லாத தொழிலாளர்களையும் அரசு பார்க்கவில்லையா? என்றும் பதிவிட்டுள்ளார்.

Related Stories: