வெடிகுண்டில் மலரும் பூக்கள்!

நன்றி குங்குமம்

சில நாட்களுக்கு முன் தில்லி ஜே.என்.யூ. போராட்டத்தில் ஒரு பெண், பாதுகாப்பு அதிகாரியை நோக்கி ரோஜா ஒன்றைக் கொடுத்தார். இந்தியா  முழுவதும் வைரல் ஆகி, அடக்கு முறைக்கு எதிரான ஆயுதமாக ரோஜாவை இளைஞர்கள் பயன்படுத்தினார்கள். வித்தியாசமான இந்தப் போராட்டத்தின் விதை பாலஸ்தீனத்தைச் சேர்ந்தது! ஆம். பாலஸ்தீனத்தில் ஒரு பெண் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலுக்கு எதிரான  ஆயுதமாக பூக்களைப் பயன்படுத்தி வருகிறார்.  

இஸ்ரேல் அதன் அண்டை நாடான பாலஸ்தீன் மீது நூற்றாண்டுகளாக போர் நடத்தி வருகிறது. அந்தப் போரில் கிட்டத்தட்ட இஸ்ரேல் இப்போது  வென்றிருக்கிறது. அத்துடன் தன் எல்லையை இஸ்ரேல் இன்னமும் விரிவுபடுத்திக் கொண்டே வருகிறது. அதற்காக எல்லை ஆக்கிரமிப்பை மிகக்  கொடூரமாக மேற்கொள்கிறது. ‘தங்கள் நாட்டைக் காத்துக் கொள்ள தாக்குதலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம்...’ என இதற்கு சப்பைக்கட்டு கட்டுகிறது  இஸ்ரேல். எனவே வேறு வழியின்றி போரை எதிர்கொள்கின்றனர் அப்பாவி பாலஸ்தீன மக்கள்.இந்நிலையில்தான், இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன  மக்களைத் தாக்குவதற்கு பயன்படுத்திய கண்ணீர்ப் புகை குண்டுகளின் ஓடுகளைச் சேகரித்து ஒரு பூந்தோட்டத்தையே உருவாக்கியுள்ளார் பாலஸ்தீன  பெண் சபிஹா அபு ரஹ்மே.

பாலஸ்தீன தலைநகர் ரமல்லாவிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது வெஸ்ட் பேங்க். அதன் அருகிலிருக்கும் பாலைவன வறண்ட  கிராமம்தான் ‘பிலின்’.அந்த வறண்ட பிலின் கிராமமே இப்போது பூத்துக் குலுங்குகிறது.இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களின் 70 சதவீதத்தை 2004ம்  ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அன்றிலிருந்து தங்களது நிலங்களை மீட்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முள்வேலிகளுக்கு எதிராக  சுற்றியுள்ள பலநூறு கிராம மக்கள் ‘நிலங்களை திருப்பித் தாருங்கள்’ என போராடி வருகின்றனர். ஒவ்வொருமுறையும் பலநூறு கண்ணீர்ப் புகை  குண்டுகளை வீசுகிறது இஸ்ரேல். ஒவ்வொரு வாரமும் சிலர் இறந்துகொண்டே இருக்கின்றனர். ஆனாலும் பாலஸ்தீனியர்கள் தங்களது  அறப்போராட்டத்தை நிறுத்துவதாக இல்லை. ஒரு கட்டத்தில் இஸ்ரேல் வீசிய கண்ணீர்ப் புகை குண்டு களின் ஓடுகள் மலைபோலக் குவிந்தன.  அதுதான் இப்போது அன்பின் ஆயுதமாக மாறி ரோஜா பூங்கொத்துகளாகப் பூக்கிறது.

அறப்போராட்டத்தைக் கலைக்க இஸ்ரேல் வீசிய கண்ணீர்ப் புகை குண்டுகள் தாக்கி உயிரிழந்த ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்களில்  ஒருவர் பாஸிம். அவர் நினைவாக இந்தப் பூந்தோட்டத்தை உருவாக்கி அதில் கிடைக்கும் செடிகளை, பூக்களை, அமைதியை விரும்பும் மக்களுக்கும்  இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், காவலர்களுக்கும் கொடுக்கிறார் அவரது அம்மா அபு ரஹ்மா. போருக்கு எதிரான ஆயுதமாக இந்த பூந்தோட்டம்  உருவாகியுள்ளது. பாலஸ்தீன மக்கள் இப்போது இந்தத் தோட்டத்தைப் பார்வையிட்டு வருகின்றனர். இஸ்ரேல் மக்களிடமும் இந்தத் தோட்டம்  மனதளவில் அன்பை உருவாக்கியுள்ளது, ‘‘என் மகன் நினைவாகவும், நிலத்தை இழந்த திக்கப்பட்டவர்களின் நினைவாகவுமே இந்த பாலைவனச்  சோலையை உருவாக்கியுள்ளேன். கண்ணீர்ப் புகை குண்டுகள் இன்றி எங்களது வாழ்க்கையை அமைக்க முடியும். கண்ணீர்ப் புகை குண்டுகளால்  மக்களைக் கொல்ல முடியும் என்கிறது இஸ்ரேல். அதே கண்ணீர்ப் புகை குண்டுகளின் ஓடுகளில் அன்பை நாங்கள் ஆழமாக நடுகிறோம்..’’ என்கிறார்  அபு ரஹ்மா.         

தொகுப்பு: திலீபன் புகழ்

Related Stories: