அமைச்சர் வேலுமணி மீதான எம்-சாண்ட் வழக்கு நீதிமன்ற அனுமதியில்லாமல் இறுதி முடிவெடுக்க கூடாது: லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைத்தல், மழை நீர் வடிகால் ஏற்படுத்தல் உள்ளிட்ட 112 பணிகளுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகளில் ஆற்று மணல் பயன்படுத்துவதாக கூறி எம்-சாண்ட் பயன்படுத்தியதாகவும், தார் சாலை அமைக்கும் பணியில் பயன்படுத்தப்படும் தாருக்கு இரண்டு மடங்கு கணக்கு காட்டியது உள்ளிட்ட  முறைகேடுகளில் ₹600 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த புகார் மீது  சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி அறப்போர் இயக்கம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.அந்த இயக்கம் தாக்கல் செய்த மனுவில், ஒரு அலுவலகத்தின் ஐ.பி முகவரியை பயன்படுத்தி பல ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருக்கின்றன. இதில் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கும் தொடர்பிருக்கிறது என்று  கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் அரசு வக்கீல் ஆஜராகி, இந்த வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். மேலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தரவேண்டும்  என்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கோரப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொள்ளும் விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் மட்டும் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் அனுதியில்லாமல் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு  துறையினர் இறுதி முடிவு எடுக்க கூடாது. மேலும், இந்த வழக்கில் அமைச்சர் எஸ்.பி வேலுமணியையும் சேர்க்க உத்தரவிடப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் அமைச்சரும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: