பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட 102 உள்ளாட்சி பதவிகளுக்கு மார்ச் 4ல் மறைமுக தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 102 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை மார்ச் 4ம் தேதி நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதனை தொடர்ந்து நடந்த மறைமுக தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 102 இடங்களில் வரும் 4ம் தேதி மறைமுக தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 16 ஊராட்சி ஒன்றிய தலைவர், 18 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 71 கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட மொத்தம் 102 பதவிகளுக்கு வரும் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு 4ம் தேதி காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிகளுக்கு மாலை 3.30 மணிக்கும் தேர்தல் நடக்கிறது. எனவே இதுதொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: