புதுவை அருகே கொடூர சம்பவம் காதலி தூக்கு போட்டு இறந்ததால் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை

* உடலில் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

* 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

காலாப்பட்டு:  புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ராகவன் (22). ஐதராபாத்தில் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இதனிடையே அவரது ஊரை சேர்ந்த, நர்சிங் படித்து வந்த அருணா (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததால், அருணாவை கண்டித்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த அருணா கடந்த 22ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அருணாவின் பெற்றோர் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் மகள் சாவில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் அருணாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அருணா இறந்த தகவல் ராகவனுக்கு தெரியவந்ததால் அவரும் ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை ராகவன் தனது நண்பர்களான சஞ்சய், சிவனேசன் ஆகியோரோடு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில்  சென்றுகொண்டிருந்தபோது, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென அவர்களை வழிமறித்தது, ராகவனை மட்டும் கடத்தி செல்ல முயன்றனர். நண்பர்கள் தடுத்ததால் கோபம் அடைந்த அந்த கும்பல், சிவனேசனை அரிவாளால் காலில் வெட்டியது. இதனால் சிவனேசனும், சஞ்சயும் தப்பி ஓடினர். ராகவனை மட்டும் பைக்கில் கடத்தி சென்ற கும்பல், கோட்டைமேடு தனியார் பஞ்சு கம்பெனி அருகே இறக்கி அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்தனர். ஆத்திரம் தீராமல் ராகவனின் முகம் மற்றும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பினர். தகவலறிந்து கோட்டக்குப்பம் போலீசார் வந்து ராகவன் உடலை மீட்டு கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதையடுத்து ராகவனின் உறவினர்கள் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் திரண்டு கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.

Related Stories: