கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 16 வயது மாணவி கூட்டு பலாத்காரம் : பிளஸ்1 மாணவன் கைது: 2 வாலிபர்களுக்கு வலை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பிளஸ்1 மாணவன் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய பட்டதாரி மற்றும் கூலி தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே திம்மசந்திரம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன், வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இவருக்கும், வேப்பனஹள்ளி அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்1 படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை, ஆள்நடமாட்டம் இல்லாத எந்த பஸ்களும் உள்ளே வராத வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்டில், இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மாணவனின் நண்பர்களான ஜோடுகொத்தூரை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (26), பட்டதாரியான திம்மசந்திரம் மஞ்சுநாத் (22) ஆகியோர் வந்தனர்.

குடிபோதையில் இருந்த அவர்கள், மாணவிக்கு நைசாக குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தனர். அதை வாங்கி குடித்த சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்ற அவரை, ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற மாணவன் உள்பட 3 பேரும், கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்து தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பலாத்காரத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்கள் ராஜா, மஞ்சுநாத் ஆகியோரை தேடி வருகின்றனர். கூட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து, கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: