சென்னை: சிஏஏக்கு எதிரான போராட்டத்தை தடை செய்யக்கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வருகிற 28ம் தேதி நடைபெறும் பாஜ பேரணியை ஒருங்கிணைக்கும் வகையில், மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஏஏ), தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) என்ற மூன்று திட்டங்களை பற்றியும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் இந்திய குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த ஒரு இஸ்லாமியருக்கு கூட எந்தவித பாதிப்பும் இல்லை என்று மீண்டும், மீண்டும் தெரிவித்தும், திட்டமிட்டே இஸ்லாமிய மக்களை குழப்புகிறார்கள். எனவே, தமிழகத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் போராட்டங்களை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) பாஜ சார்பில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பேரணியை ஒருங்கிணைக்க மாநில அளவில் பொது செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.