நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசல்

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் மயங்க் அகர்வால் அரை சதம் விளாசியுள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது.  ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் (34), பிரித்வி ஷா (16) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து இந்திய அணி குறைந்த ரன்களில் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரஹானே 38 ரன்களுடனும் (122 பந்து, 4 பவுண்டரி), ரிஷாப் பண்ட் 10 ரன்களுடனும் (37 பந்து) களத்தில் இருந்தனர். அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது.  அதன் முடிவில் இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா  4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் பிளண்டெல் ஆகியோர் களமிறங்கி விளையாடினர்.  அந்த அணியில் அதிக அளவாக வில்லியம்சன் (89), டெய்லர் (44) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  லாதம் (11), பிளண்டெல் (30), நிக்கோல்ஸ் (17) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அந்த அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 71.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.  வாட்லிங் (14), கிராண்ட்ஹோம் (4) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனை அடுத்து இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது.  இதில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 183 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதன்பின் இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.  தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அரை சதம் (58) கடந்து ஆட்டமிழந்துள்ளார்.  பிருத்வி ஷா (14), புஜாரா (11) மற்றும் கோலி (19) ரன்களில் வெளியேறினர். தொடர்ந்து இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்துள்ளது.  ரஹானே (9), விகாரி (2) ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Related Stories: