ஆகாயத்தாமரையின் தாயகம் தென் அமெரிக்கா!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஆகாயத்தாமரை அல்லது வெங்காயத்தாமரை ஒரு மிதக்கும் நீர்வாழ் பல்லாண்டு அழியா தாவரமாகும். இதை ஆங்கிலத்தில் Water Hyacinth எனவும் அழைக்கின்றனர். இந்தத் தாவரம் வெப்பமண்டலமான தென் அமெரிக்காவைச் சேர்ந்தது. பிறகு அழகுக்காக வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற கண்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது இலைகளுக்குக்கீழ் தன்னகத்தே கொண்டுள்ள  வெங்காயம் போன்ற அமைப்பினால் வெங்காயத் தாமரை எனவும் அழைக்கப்படுகிறது. இதன் தண்டுகளில் காற்று நிரப்பட்டிருப்பதால் மிதப்பதற்கு ஏதுவாக இருக்கிறது. இதில் ஊதா நிறப் பூக்கள் பூக்கின்றன. இவையே இதன் கவர்ச்சிக்கும் உலகை ஆட்கொண்டதற்கும் காரணம்.

தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் விக்டோரியா மகாராணி கொல்கத்தாவிற்கு வருகை தரும்போது கொண்டுவரப்பட்டு ஊக்ளி நதியில் விட்டதாகக் கூறப்படுகிறது. ஊக்ளி நதியானது லண்டனிலுள்ள தேம்ஸ் நதி போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக இடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தாவரம் மிகவும் வேகமாகவும் மற்றும் எத்தகைய மாசடைந்த நீர்நிலைகளிலும் வளரும் தன்மையுடையது. ஏரியிலோ அல்லது குளத்திலோ உள்ள சில ஆகாயத்தாமரை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக வளரும் தன்மையுடையது. மேலும் இத்தாவரத்தின் விதை 30 வருடங்களுக்கு முளைக்கும் தன்மையைத் தக்கவைத்திருக்கும். இத்தகைய பண்புகள் இத்தாவரம் வேகமாக வளர்ந்து பரவுவதற்கும் மற்றும் அழியாமல் இருப்பதற்கும் காரணமாகும்.

தற்போது இது தாயகமான தென்னமெரிக்காவைத் தவிர மற்ற கண்டங்களிலும் மிக அதிகமாக வளர்ந்து உள்நாட்டு நீர்வளங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது. அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் காணாமல்  போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.

Related Stories: