எல்.கே.ஜி.யில் சேர நுழைவுத்தேர்வு எழுதும்போது 5,8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கூடாதா? செங்கோட்டையன் பேட்டி

சத்தியமங்கலம்: தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் சேர நுழைவுத்தேர்வு எழுதும்போது அரசுப்பள்ளியில் பொதுத்தேர்வு நடத்தக்கூடாதா? என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 57 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்கள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளுக்கு கட்சிப் பாகுபாடின்றி நிதி வழங்கி உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் கூடுதலாக காவிலிபாளையம் குளம் உள்ளிட்ட குளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக, வரப்பாளையம் மற்றும் சித்தோடு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தாமதமாக செல்வதற்கு காரணம் அங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் மழை பெய்து மரங்கள் முறிந்து விழுந்ததே ஆகும்.

குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர 3 வயது குழந்தைகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 5,8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தக்கூடாதா?இந்த பொதுத் தேர்வு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கு நடத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: