சென்னை: வண்டலூரில் ரூ.92 கோடி செலவில் மேம்பாலம் உள்பட மொத்தம் ரூ.211 கோடியே 66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் ரூ.91 கோடியே 80 லட்சம் செலவில் தேசிய நெடுஞ்சாலையை சென்னை வெளிவட்ட சாலையுடன் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய ஒரு ஏறு தளம் மற்றும் இரண்டு இறங்கு தளங்களுடன் கூடிய பல்வழி பரிமாற்ற மேம்பாலம் மற்றும் வண்டலூர் - மண்ணிவாக்கம் வரையிலான 2.65 கிலோ மீட்டர் நீள பிரதான சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.