* 200 பேருக்கு வேலை வாங்கி தந்தது கண்டுபிடிப்பு
* குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உயர் பதவி
* பல கோடி வசூல் செய்தது பற்றி திடுக் தகவல்கள்
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் சென்னையில் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக உள்ள சித்தாண்டி மனைவி, இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேர் முறைகேடாக முதல் 10 இடங்கள் பிடித்து வெற்றி வெற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்ட உதவி ஆய்வாளரின் சகோதரரான காரைக்குடி சார் பதிவாளரின் நேர்முக உதவியாளர் வேல்முருகனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பணம் கொடுத்து மோசடியாக வெற்றி பெற்ற 200 பேர் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் முற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதில் முறைகேடாக தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.இந்த மோசடி வழக்கு விசாரணையை, தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38), திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45), ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(30), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார்(34), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த சீனுவாசன்(33),கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்கி(எ)த.விக்னேஷ்(25), கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுகா தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ்(31) ஆகியோரை என 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின்படி இடைத்தரகர்கள் மூலம் ரூ.7.50 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் குறித்த விபரங்களை சிபிசிஐடி போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் மெகா மோசடி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குருப் 4 தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து மோசடியில் சிக்கியுள்ள ராமேஸ்வரம் தேர்வு மையம் குரூப் 2ஏ தேர்வின் போது முதல் 100 இடங்களில் 37 இடங்களை அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்கள் கடந்த ஓராண்டாக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக நல்ல ஊதியத்தில் பணியில் உள்ளனர். குரூப் 4 முறைகேடு போன்று கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வு எழுதிய நபர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முறைகேட்டிலும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் உதவியுடன் ஜெயகுமார் ஆகியோர் தான் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இடைத்தரகராக செல்பட்ட சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூர் கிராமத்தை சேர்ந்த சித்தாண்டி என்பவர், சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இவர் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு இடைத்தரகராக செயல்பட்டு முறைகேடாக தேர்வில் வெற்றி பெற செய்துள்ளார். மேலும், அவரிடம் பணம் கொடுத்த அனைவரும் ராமநாதபுரம் மையத்தில் தான் தேர்வு எழுதிய உள்ளனர். உதவி ஆய்வாளர் சித்தாண்டியிடம் குரூப் 2 தேர்வுக்கு ரூ.15 லட்சமும், குரூப் 4 தேர்வுக்கு ரூ.9 லட்சமும் 200 பேர் நேரடியாக பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த மோசடி பின்னணியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக ஈடுபட்டு உள்ளதும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் மனைவி பிரியா தமிழகத்தில் 5வது இடமும், அவரது சகோதரன் வேல்முருகன்(30) தமிழகத்தில் 3 வது இடமும், வேல்முருகன் மனைவி தமிழகத்தில் 6வது இடமும் மற்றொரு தம்பி கார்த்திக் தற்போது நடந்த குரூப் 4 தேர்வில் தமிழகத்தில் 10 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். அனைவரும் ராமநாதபுரம் மையத்தில் தான் தேர்வு எழுதியதும் சிபிசிஐடி விசாரணையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வில் முதல் 6 இடங்களில் பிடித்திருப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்பியது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் உதவி ஆய்வாளர் சித்தாண்டி குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் ராமநாதபுரம் மையத்தில் மோசடியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, நேற்று மதுரை மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் 10 பேர் அதிரடியாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியகண்ணணூர் கிராமத்தில் உள்ள உதவி ஆய்வாளர் சித்தாண்டி வீடு மற்றும் சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள அவரது மாமனார் வீடு ஆகிய இரண்டு இடங்களுக்கு சென்று பார்த்து இரண்டு வீடுகளும் பூட்டப்பட்டு இருந்தது. உடனே இன்ஸ்பெக்டர் சேகர் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஒரு வாரமாக வீட்டு பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டதாக தெரிவித்தனர்.அதைதொடர்ந்து, சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் காரைக்குடி பத்திரபதிவு அலுவலகத்தில் சார் பதிவாளரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் சகோதரன் வேல்முருகனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் வேல்முருகனை மதுரை மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது, டிஎன்பிஎஸ்சி தேர்வின் போது மாவட்ட வாரியாக தேர்வு மையத்தில் இருந்து விடைத்தாள் கொண்டு வரும் பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமையிலான ஆயுதப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது, டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டதும், உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் ஆலோசனைப்படி கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வை அவரது மனைவி உட்பட குடும்பத்தில் உள்ள 4 பேரும் எழுத வைத்து முதல் 10 இடங்களில் வெற்றி பெற செய்துள்ளார். அதில் தான் வேல்முருகன் தமிழக அளவில் 3ம் இடம் பிடித்தார். அதோடு இல்லாமல் கடந்த ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வில் உதவி ஆய்வாளர் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இடைத்தரகராக செயல்பட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நம்பிக்கையான நபர்களை இடைத்தரகர்களாக நியமித்து அவர்கள் மூலம் பல கோடி சாம்பாதித்ததும் விசாரணையில் தெரியவந்தது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக வேல்முருகன் சேர்க்கப்படும் உள்ளார். இதனால் வேல்முருகனை சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வின் போது ராமநாதபுரம் மையத்தில் தேர்வு எழுதி முதல் 100 இடங்களை பிடித்த 37 பேரிடம் விசாரணை நடத்தும் பணி இடைத்தரகராக செயல்பட்ட உதவி ஆய்வாளர் சித்தாண்டி சகோதரர் வேல்முருகனிடம் இருந்து தொடங்கி உள்ளது. இந்த மெகா மோசடியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் மட்டும் செய்து இருக்க முடியாது. எனவே இதன் பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.