புதுச்சேரியில் 122 ஆண்டு பழமையான பஞ்சாலை மூடப்படுவதாக அறிவிப்பு: தொழிலாளர்கள் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் 122 ஆண்டுகாலமாக செயல்பட்டுவந்த பழமையான பஞ்சாலை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரென்ச் ஆட்சி காலத்தில் 1898ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த ஏ.எப்.டி பஞ்சாலை. இதில் பஞ்சி நூலாகி, துணியாக நெய்யப்பட்டு சாயமேற்றும் வசதி உள்ளிட்டவற்றை கொண்ட ஒருங்கிணைந்த மில்லாக செயல்பட்டுவந்தது.  இந்த பஞ்சாலையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள், பல்வேறு முறைகேடுகள், மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதற்கிடையே 2011ம் ஆண்டு தானே புயலால் 2 பகுதிகள் சேதமடைந்ததால், அங்கு வேலை செய்யப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 1 வருடத்திற்கு மேலாக அந்த ஊதியமும் வழங்கப்படாத சூழலில்,  பஞ்சாலையை வருகின்ற ஏப்ரல் மாதம் 30ம் தேதியோடு மூடப்படும் என வந்திருக்கும் அறிவிப்பு, இங்கு பணிப்புரியும் 619 தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பஞ்சாலையின் வளர்ச்சிக்காக பாடுபட்டிருக்கும்  தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு, ஆலையை மூடுவதற்கான உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பஞ்சாலையை மூடுவது தொடர்பாக ஆளுநரிடம் கேட்டபோது, அவர் ஆலையை மூடவேண்டுமென கூறியுள்ளார். இதனால் தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, முதல்வர் நாராயண சாமியிடம் கேட்டபோது, மில்லை எந்த காரணத்திற்காகவும் அரசு மூடாது என தெரிவித்துள்ளார்.

Related Stories: