புதுச்சேரி: புதுச்சேரியில் 122 ஆண்டுகாலமாக செயல்பட்டுவந்த பழமையான பஞ்சாலை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரென்ச் ஆட்சி காலத்தில் 1898ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த ஏ.எப்.டி பஞ்சாலை. இதில் பஞ்சி நூலாகி, துணியாக நெய்யப்பட்டு சாயமேற்றும் வசதி உள்ளிட்டவற்றை கொண்ட ஒருங்கிணைந்த மில்லாக செயல்பட்டுவந்தது. இந்த பஞ்சாலையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள், பல்வேறு முறைகேடுகள், மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதற்கிடையே 2011ம் ஆண்டு தானே புயலால் 2 பகுதிகள் சேதமடைந்ததால், அங்கு வேலை செய்யப்பட்டு வந்த தொழிலாளர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.