நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி 20 போட்டி: சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி

ஹாமில்டன்: இந்தியா- நியூசிலாந்து இடையேயான 3-வது டி 20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று நியூசிலாந்து கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக களமிறங்கியது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா அதிகப்பட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து போட்டி சமனில் முடிந்தது. கேன் வில்லியமசன் 48 பந்துகளில் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விளாசி 95 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட போது முஹமது ஷமி பந்து வீசினார். கடைசி ஓவரில் வில்லியம்சன் அவுட்டாகி வெளியேற கடைசி ஒரு பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. ரோஸ் டெய்லர் பந்தை எதிர்கொண்டு ரன் அடிக்க முயன்ற போது போல்டாகி அவுட்டானார். இதனையடுத்து போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணி சார்பில் சூப்பர் ஓவரை பும்ரா வீசுகிறார். சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் விளாசியது. இதையடுத்து 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். ரோஹித் சர்மாவின் அதிரடியான 2 சிக்ஸ்சர்களால் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணி தொடரையும் வென்றுள்ளது.

Related Stories: