இளம்பெண்ணை பலாத்காரம் செய்து இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்: உடன் தங்கியிருந்த குற்றவாளி கைது

நாக்பூர்: தன்னுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்து இரும்பு கம்பியை பிறப்புறுப்பில் சொருகி சித்ரவதை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் சூப்பர்வைசராக வேலை செய்பவர் யோகிலால் ரஹங்கதாலே(52). இவரும், இவருடன் வேலை செய்யும் ஒரு வாலிபர் மற்றும் அவரது 19 வயது சகோதரி அவர்களது உறவுக்காரப் பெண் ஆகியோர் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த 21ம் தேதியன்று இளம்பெண்ணின் சகோதரர் தனது உறவுக்காரப் பெண்ணுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். வீட்டில் யோகிலாலும் இளம்பெண்ணும் மட்டும் தனியாக இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இளம்பெண்ணை யோகிலால் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதற்கு இளம்பெண் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர் கூச்சலிடமால் இருக்க யோகிலால் ஒரு துணியை அந்த பெண்ணின் வாய்க்குள் திணித்து அடைத்தார். இதனால் அந்த பெண் மயக்கமடைந்தார். அதன் பிறகு, அந்த பெண்ணை பலாத்காரம் செய்த யோகிலால், அப்படியும் வெறி அடங்காமல், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி ஒன்றை சொருகி சித்ரவதை செய்துள்ளார். இந்த கொடூரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு அந்த பெண்ணின் சகோதரன் சொந்த ஊரில் இருந்து திரும்பி வந்தார். அவரிடம் நடந்த கொடுமைகளை அந்த பெண் கூறினார். அதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று யோகிலாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த பின்னர் நேற்று முன்தினம் யோகிலால் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர் சுனில் சவான் கூறினார்.

Related Stories: