மார்த்தாண்டம் : மார்த்தாண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலர் 8 ஆயிரம் லஞ்சம் கேட்டு ஒருவரை மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆடியோவில் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராம நிர்வாக அலுவலரை ஒருவர் தொடர்பு கொள்கிறார். அவரிடம் விஏஓ, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் பகுதியில் மரங்களை வெட்டி ஆக்ரமிப்பு செய்தது தொடர்பாக வருவாய் ஆய்வாளருக்கு யாரோ கூறியுள்ளார்கள். எனவே இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்கும், இந்த விவகாரத்தில் சாதகமான அறிக்கை தயாரிப்பதற்கும் 8 ஆயிரம் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என கூறுகிறார். மேலும் இது தொடர்பாக தாசில்தாரிடம் பேசி சரி செய்து விட்டேன் எனவும் கூறுகிறார். அதற்கு மறுமுனையில் பேசும் நபர், சம்பந்தப்பட்டவர் மிகவும் ஏழ்மையில் உள்ளார். அவருக்கு உதவி செய்யுங்கள் என்கிறார்.