லண்டன்: வங்கிக் கடனுக்கு ஈடாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பதற்கு, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ளதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி வருவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இதற்கிடையே கத்தார் தேசிய வங்கி லண்டன் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவின் நிறுவனமான ‘போர்ஸ் இந்தியா’ கத்தார் தேசிய வங்கியில் சுமார் ரூ.47.23 கோடி கடன் வாங்கியுள்ளது.