வாஷிங்டன்: சிஏஏவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் போராட்டம் நடத்தியதால், அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழாவில் பாதிப்பு ஏற்பட்டது. நாட்டின் 71வது குடியரசு தினம், உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் நேற்று முன்தினம் கொண்டாப்பட்டன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் உள்ளது. நியூயார்க், சிகாகோ, அட்லாண்டா, சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் இந்திய துணை தூதரகங்கள் உள்ளன. அமெரிக்காவில் சிஏஏவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு தரப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். எதிர்த்து போராடுபவர்களை விட, ஆதரவானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்கிடையே, குடியரசு தினவிழாவையொட்டி, சிஏஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் அமெரிக்காவின் பல நகரங்களில் நேற்று முன்தினம் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர். சிஏஏ மற்றும் என்ஆர்சியை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிஏஏ ஆதரவு போராட்டமும் நடந்தது. அவர்கள் இது தைரியமான நடவடிக்கை என மோடியை பாராட்டினர்.