கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா தொடங்கியது: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி நடந்தது. 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சைக்கொடிகள் பவனி, திருக்கொடி பவனி, செபமாலை நடந்தது. மாலை 6.30க்கு கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமைவகித்து மறையுரை ஆற்றினர். பங்கு தந்தை ஜோசப்ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் சகாயஆன்டணி, சகாய வில்சன், அன்பின்தேவசகாயம், பங்குப்பேரவை துணைத்தலைவர் நாஞ்சில்மைக்கேல், செயலாளர் சந்தியாவில்லவராயர், துணைசெயலாளர் தினகரன், பொருளாளர் பெனி, பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, அருட்சகோதரர்கள் மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

2-ம் நாள் விழாவான இன்று (சனிக்கிழமை) முதல் 8ம் திருவிழாவான 13ம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலியும், காலை 6.15 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. 8 மணி முதல் 9 மணி வரை திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, திருப்பலி, மறையுரை, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9ம் திருவிழாவான 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலி, காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு நோயாளர்களுக்கான திருப்பலி நடக்கிறது. அன்னைநகர் பங்கு அருட்பணியாளர் சகாயஆனந்த் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30க்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, 8க்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.

10 ஆம் திருவிழாவான 15ம் தேதி (ஞாயிறு) அதிகாலை 4.30க்கு தங்கத்தேர் திருப்பலி நடக்கிறது. கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றுகிறார். 6 மணிக்கு குருகுல முதல்வர் கிலாரியுஸ் தலைமையில் பெருவிழா நிறைவுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு காசா கிளாரட் சபை அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் தலைமை தாங்குகிறார். அருட் பணியாளர் இன்னாசிமுத்து மறையுரையாற்றுகிறார். காலை 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி, 10.30க்கு மலையாள திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கலாசன்ஸ் பள்ளி அதிபர் சுனில் தலைமை வகிக்கிறார். பள்ளி முதல்வர் ஸ்டாலின் மறையுரை ஆற்றுகிறார். பகல் 12 மணிக்கு சின்ன முட்டம் பங்கு அருட்பணியாளர் கிளாசின் தலைமையில் தமிழில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் நடக்கிறது.

Related Stories: