நகை வாங்குவதுபோல் நடித்து 3 சவரன் வளையல் திருட்டு

சென்னை:  சைதாப்ேபட்டை ஜூனியர் சாலையில் சுனில் நிகார் (52) என்பவர் கவுதம் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 24ம் தேதி இரண்டு பெண்கள் வந்து, தங்களது குழந்தைக்கு வளையல் வேண்டும், என தெரிவித்துள்ளனர். இதனால், பல டிசைன்களில் வளையல்களை கடை ஊழியர்கள் காண்பித்துள்ளனர்.

அவற்றை பார்த்துவிட்டு, பிறகு வந்து வாங்குவதாக கூறி சென்றுவிட்டனர். இதற்கிடையே கடையில் உள்ள நகைகளை நேற்று முன்தினம் சுனில் நிகார் சரிபார்த்தபோது 3 சவரன் வளையல் மாயமாகி இருந்தது. உடனே கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது, கடந்த 24ம் தேதி வளையல் வாங்க வந்த 2 பெண்கள், சுனில் நிகாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டு 3 சவரன் வளையலை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சிசிடிவி பதிவுகளுடன் அவர் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களை தேடி வருகின்றனர்.

Related Stories: